சென்னை: இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இயலாதவர்கள், ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்கள் வழங்க, தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் தனியார்கள், சமூக நல ஆர்வலர்கள் சமைத்த உணவை நேரடியாக வழங்க வேண்டாம் எனவும், தங்களிடம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, இன்று (மார்ச்-25) முதல் அமலுக்கு வந்ததுள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, தேவையான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சானிட்டரி நாப்கின், முக கவசம் ஆகியவற்றையும் ஜெ.ஜெ. விளையாட்டு அரங்கம், அண்ணா நகர், அம்மா அரங்கத்தில் கொடுக்கலாம். நேரடியாக யாரும் சமைத்த உணவை வழங்க வேண்டாம். ஏனெனில் கூட்ட நெரிசல் ஏற்படலாம். நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.